முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

bipin rawat

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இங்கு இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். 

இந்நிலையில் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி  பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், குன்னூர் அருகே முப்படை தலைமை தளபதி  ஜெனரல் பிபின் ராவத் மற்றும் 13 பேருடன் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.  மேலும் சம்பவ இடத்திற்கு தற்போது விரைந்து செல்ல இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் மீட்பு பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 6.30 மணி அளவில் கோவை விமான நிலையம் சென்றார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கார் மூலம் சாலை மார்க்கமாக குன்னூர் புறப்பட்டு சென்றார். வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரவு 9 மணி அளவில் குன்னூரில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு மு.க.ஸ்டாலின் சென்றார்.

பின்னர் அங்குள்ள எம்.ஆர்.சி. மையத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கார் மூலம் குன்னூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு இரவு ஓய்வெடுத்தார். 

தொடர்ந்து இன்று  காலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.